Wednesday, September 4, 2024

களஞ்சியம் நமக்கான மென்பொருள்.


தமிழ் நாட்டில் உள்ள சுமார் மூன்று லட்சம் ஓய்வூதியர்களின் விவரங்கள் மற்றும் பயன்பாடுகள் பற்றிய ஒரு மென்பொருள், அதுவும் மிடுக்கு பேசியில்(Smart phone) சரிபார்க்க முடியும் என்பது அறிவியலின் பாய்ச்சலே காரணமாகும். எங்கும் எதிலும் கணினி தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிட்ட நிலையில் அவைகளுடன்  இணைத்து பயணப்படுவதே சாலச்சிறந்ததாகும். சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன், திரு.ராஜிவ்காந்தி அவர்கள் ஒன்றிய அரசின் பிரதம அமைச்சராக இருந்த போது துவக்கப்பட்டது. 21 ஆம் நூற்றண்டை நோக்கி என்று அரசின் அனைத்து துறைகளையும் கணினி மயமாக்கப்படுதல் என்ற திட்டம். துவக்கத்தில் இத்திட்டம் சந்தித்த எதிர்ப்பானது சொல்லிமாளாது. தமிழ் நாடு அரசும் ஒன்றிய அரசின் வழியில் செயல்படுத்த முனையும் போது அன்றைய அரசு ஊழியர்சங்கம் மிககடுமையாக எதிர்த்தது, போட்டி சங்கம் நடத்த வேண்டிய நிலையில் இருந்த அரசுப்பணியாளர் சங்கமும் இணைந்து எழுப்பிய குரலில் என்னுடைய குரலும் அச்சிரம் பிசகாமல் கலந்து ஒலித்தது உண்மையே. காலம் கடந்து ஞானம் பிறந்தது போல கணினி இல்லா வாழ்வு காற்றை இழந்த உயிர் போலாகும் என்பதை எனது அறிவாலும் அனுபவத்தாலும் கண்டுணர்ந்த உண்மையாகும்.

கணினியின் குறு வடிவமே செல்லிடப்பேசி அல்லது மிடுக்கு பேசியாகும். இன்று செல்லிடபேசி இல்லாத கரங்களே இல்லை என்ற வகையில் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளது. ஆரம்ப காலங்களில் செல்லிடப்பேசியை பயன்படுதுவதில் ஏற்பட்ட தடுமாற்றங்கள் தவிப்புகள் தற்போது பெருமளவில் குறந்துவிட்டது கண்கூடு. புதிய நடைமுறைகள் துவக்கத்தில் சந்திக்கும் இடர்பாடுகளைக் கொண்டு அவைகளை மறுப்பது என்பது நம்மை பின்நோக்கி இழுப்பதற்கு சமமாகும். பழையன கழிதலும் புதியன புகுதலும் வளர்ச்சிக்கான படிகளாகும்.. அறிவியல் உருவாக்கித் தருகின்ற வசதிகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்வதே அறிவுடைமையாகும். அந்த வகையில் தற்போது நமக்கு ஆக்கி அளித்திருப்பது களஞ்சியம் என்ற மென்பொருளாகும். நமது உள்ளங்கையில் நமது ஓய்வூதியம் பற்றிய அனைத்து விபரங்களும். புத்தகம் போல பெரிய வடிவத்தில் ஓய்வூதியம் வழங்கல் ஆணை (PPO-Pension Payment Order) என்று இருந்த நிலையில் வேறுபட்டு அனைத்தும் நமது கையடக்க செல்லிடப்பேசியில் ஒளிர்கின்றது. பயன்பாட்டுக்கு வந்த ஆரம்ப நிலையில் தவறுகளும் செயல்படாமையும் ஓய்வூதியர்களுக்கு ஏற்பட்டது உண்மையே, ஆனல் இப்போது அத்தவறுகள் களையப்பட்டு இலகுவாக நம்மால் செயல்படுத்தமுடிகிறது. மிகக்குறைந்த அளவே மிடுக்குப்பேசியின் செயல்பாடுகளை அறிந்தவர்கள் கூட சிறப்பாக களஞ்சியம் மென்பொருளை பயன்படுத்த முடியும் என்ற நிலை தற்போதுள்ளது.

ஏற்கனவே, IFHRMS ல் பதிவுகள் ஏற்றப்பட்ட ஓய்வூதியர்களின் சுயவிவரங்கள் களஞ்சியம் மென்பொருளில் தெளிவாக காட்டப்படும். தொடர்ச்சியாக மாத ஓய்வூதியம், ஆண்டுக்கான மொத்த ஓய்வூதியம், வருடாந்திர நேர்காணல், ஒரு கருவூலத்திலிருந்து மற்றொரு கருவூலத்திற்கு மாறுதல், பண்டிகை முன்பணம் பெறல், வாரிசுகளின் பெயர்குறிப்பு, வருமான வரி போன்ற பலவகை உதவிகள் இந்த மென்பொருள் மூலம் பெற்றுக் கொள்ளமுடியும். அதில் சில உதவிகள் இன்னும் தயாரிப்பு நிலையில் உள்ளது. ஆனல் மிக அத்தியாவசியமான உதவிகள் சிறப்பாக செயல்படுகிறது. ஆகவே அனைத்து ஓய்வூதியர்களும் களஞ்சியம் மென்பொருளை பதிவிறக்கி செல்பேசியில் பதிந்து கொள்ள வேண்டுகிறேன். உதவிக்கு தங்களது படித்த அல்லது படித்துக்கொண்டு இருக்கும் மகன், மகள், மருமகள், பேரன், பேத்தி போன்றவர்களை பயன்படுத்துங்கள். அல்லது கணினி பற்றி அறிந்த சக ஓய்வூதியர்களின் உதவியை நாடுங்கள். நமக்காக வடிவமைக்கப்பட்ட மென்பொருள் முழுவதுமாக பயன்படுத்துங்கள், குறை நிறைகளை பகிர்ந்து கொள்வதன் மூலம் இம் மென்பொருளை மேம்படுத்த முடியும்.என்பதை கவனத்தில் கொள்ள வேண்டி நிறைவு செய்கிறேன். நன்றி

                                                                 

                                                                                            

 

 

 

Wednesday, June 26, 2024

இந்தியப் பாராளுமன்ற தேர்தல்.

 இந்தியாவின் தேர்தல் வரலாறு நமக்கு சொல்ல வருவது என்ன?

 இந்திய பாராளுமன்றம் தனது ஜனநாயக கடமையின் ஒரு பகுதியாக 7கட்ட தேர்தலை நடத்தி முடித்து ஜூன் மாதம் புதிய அரசு பதவி ஏற்றுள்ளது. ஆனால் கடந்த காலங்கள் மாதிரியல்லாமல் இன்று பதவியேற்றுள்ள அரசு ஒரு சிறுபான்மை அரசாக உள்ளது. அதன் கூட்டணி கட்சிகளுடன் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்துள்ளது.

2014 மற்றும் 2019 ஆண்டுகளில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியில் இருந்த அரசு தனது தவறுகளின் காரணமாக மக்களின் ஆதரவினை இழந்து கீழ்நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது. எதிர் கட்சிகளே இல்லை என்ற நிலை மாறி பலமான எதிர் கட்சிகளின் கூட்டணி யானை பலம் பெற்று பாரளுமன்றத்தை நிரப்பியுள்ளது. அரசு ஆட்சி அமைத்த நாள் முதல் எதிர் கட்சிகளின் தொடர்சியான குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி தவிக்கின்றது. அதிலும் மிகவும் முக்கியமானதும், இந்திய வரலாற்றில் இல்லாததும் நடைபெற்றுள்ளது. 

ஆம் நண்பர்களே, பாராளுமன்ற சபாநாயகர் பதவிக்கு நடந்து முடிந்த தேர்தல். அது எவ்வாறு நடைபெற்றது என்பதை பற்றி தொடர்ந்து பார்ப்போம். அடுத்த பதிவில்.........